அமெரிக்காவில் ஆன்மிகச் சுற்றுப்பயணம் முடிந்து திங்கள்கிழமை குன்றக்குடி திரும்பிய பொன்னம்பல அடிகளாரை திருமடத்தினர், ஊர் மக்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றனர்.
அமெரிக்காவின் கரோலினா மொரிஸ்வேலி என்ற பகுதியில் உள்ள முருகன்கோயில் விழா மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் விழா, ஆன்மிகச் சொற்பொழிவு போன்றவை நிகழ்த்துவதற்கு பொன்னம்பல அடிகளார் கடந்த மே 12 ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்டு அமெரிக்காவிற்குச் சென்றார்.
அங்கு தமிழ் அறிஞர்கள் அவரை வரவேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்கச் செய்தனர். அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய மண் வாசனை மாநாட்டில் பொன்னம்பல அடிகளாரின் கல்வி மற்றும் சமுதாயச் சேவையைப் பாராட்டி "மாட்சிமை விருது' வழங்கப்பட்டது. ஜூன் 12ஆம் தேதி நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட அடிகளார் ஜூன் 13 இல் இந்தியா திரும்பி சென்னையில் தங்கியிருந்தார்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு குன்றக்குடி திருமடத்திற்கு திங்கள்கிழமை மாலையில் திரும்பினார். அவருக்கு குன்றக்குடி திருமடத்தின் அலுவலர்கள், பணியாளர்கள், குன்றக்குடி கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் பலரும் வரவேற்பு அளித்தனர்.
மேலும் காரைக்குடி அண்ணா தமிழ்க்கழக பேராளர் பொன்துரை, காரைக்குடி புத்தகத் திருவிழாக்குழு துணைத் தலைவர் பி.வி. சுவாமி, காரைக்குடி தமிழிசைச் சங்கச் செயலாளர் வி. சுந்தரராமன், எழுத்தாளர் ஜனநேசன் மற்றும் தமிழ் ஆர்வலர் களும் அடிகளாருக்கு சால்வை அணிவித்து வரவேற்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.