தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக அமமுக கட்சியின் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி, மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மாரியப்பன் கென்னடி உள்பட அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
மக்களவைத் தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் வேட்பாளராக தேர்போகி வே.பாண்டி,மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக மாரியப்பன் கென்னடி ஆகியோரை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து மதுரையிலிருந்து காரில் வந்த தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன்கென்னடி, அமமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலர் கே.கே.உமாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் திங்கள்கிழமை திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, காரைக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
அப்போது வரும் வழிகளில் அவருக்கு கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தது, அதிகமான கார்களில் வந்தது, பட்டாசு வெடித்தது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வேட்பாளர்கள் உள்பட அமமுகவினர் மீது அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக திருப்பவனம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் பீமன் கொடுத்த புகாரின் பேரில் வேட்பாளர்களான தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன் கென்னடி, மாவட்ட செயலர் உமாதேவன் உள்ளிட்ட அமமுகவினர் மீது திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும்,திருப்புவனம் சந்தை திடலில் அனுமதியின்றி பட்டாசு வெடித்தாக அமமுகவைச் சேர்ந்த சொக்கநாதன், பாண்டிகருப்பு, பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை பறக்கும் படை வட்டாட்சியர் செந்தில்வேல் கொடுத்த புகாரின் பேரில் தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன் கென்னடி, வேலுச்சாமி ஆகியோர் மீதும், கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரவர்மன் கொடுத்த புகாரின் பேரின் அனமதியின்றி பட்டாசு வெடித்ததாக விஜயகுமார் என்பவர் மீதும் மானாமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோன்று, கிராம நிர்வாக அலுவலர் கெளரிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் தேர்போகி வே.பாண்டி, மாரியப்பன் கென்னடி, கே.கே.உமாதேவன், அன்புமணி ஆகியோர் மீது சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுபோன்று திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அமமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.