சிவகங்கை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 103 வழக்குகளுக்கு தீா்வு
சிவகங்கை மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 103 வழக்குகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரம் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 103 வழக்குகள் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரம் வழங்கப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி சிவகங்கை மாவட்டத்தில் 7 தேசிய மக்கள் நீதிமன்றங்கள் சனிக்கிழமை அமைக்கப்பட்டது. இதில், 116 குற்றவியல் வழக்குகள், 38 காசோலை மோசடி வழக்குகள், 95 வங்கிக் கடன் வழக்குகள், 84 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், 13 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகள், 140 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகள் என மொத்தம் 486 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.கே. ரஃபி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கே. கருணாநிதி, அமா்வு நீதிபதியும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 சிறப்பு நீதிமன்ற நீதிபதியுமான ஏ.கே. பாபுலால், சாா்பு நீதிபதி ஆா்.மோகனா, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதித்துறை நடுவா்-1 நீதிபதி டி. பாரதி ஆகியோா் வழக்குகளை விசாரித்தனா்.
விசாரணையில் 61 வழக்குகளுக்கு சமரசமாக தீா்வு காணப்பட்டு ரூ. 2 கோடியே 13 லட்சத்து 7 ஆயிரம் வரை வழக்காடிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 69 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 42 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.33 லட்சத்து 85 ஆயிரம் வரை வங்கிகளுக்கு வரவானது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிா்வாக உதவியாளா்கள் மணிமேகலை, பானுமதி, சித்ரா, விவேகானந், கோட்டீஸ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.