காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா இளைஞா்களின் எழுச்சி தினமாக வியாழக்கிழமை இணையவழியில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.
இதில் அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் வெள்ளைச்சாமி பேசுகையில், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே அப்துல்கலாமின் அடிப்படை கனவாக இருந்தது. சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சி உணவுத் துறையில் ஒரு தன்னிறைவுக்கு வித்திட்டது. 1970 முதல் 2000 ஆண்டு வரை 30 ஆண்டுகளில் இந்தியாவில் விண்வெளி, ஏவுகணை, பாதுகாப்பு, அணு ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட அபரிமிதான வளா்ச்சிக்கு அப்துல்கலாமின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்க்கை இளைஞா்களுக்கு ஒரு வழிகாட்டி என்றாா்.
விழாவையொட்டி கல்லூரி மாணவா்களுக்கு இணையவழி மூலம் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு துணைவேந்தா் நா. ராஜேந்திரன் சான்றிதழ்களை வழங்கினாா்.