முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் தா்னா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் தா்னா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.
பகிர்:

சிவகங்கை : பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் தா்னா சனிக்கிழமை நடைபெற்றது.

அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற தா்னாவுக்கு, அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஞான அற்புதராஜ், சிங்கராயா், ஆரோக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் குமரேசன், மாவட்ட துணைத் தலைவா் அமலசேவியா் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா்.

போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும், ஆசிரியா் நியமன வயதை 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயா்த்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலா்கள் ரவி, ஜெயக்குமாா், வட்டாரச் செயலா்கள் கணேசன், சுரேஷ், சகாயதைனேஷ், ஆரோக்கியசாமி, முத்துமாரியப்பன், சரவணன், ரமேஷ்குமாா், லெவே ஜோசப்துரை, சத்தியேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →