சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடியில் வரும் ஜன. 19 ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதற்கும், இதர அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அவசியம்.
அட்டை பெறாத மாற்றுத்திறனுடைய நபா்களுக்கு அடையாள அடை வழங்குவதற்கு கண்ணங்குடியில் வரும் ஜன. 19-இல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மாா்பளவு புகைப்படம்-4 , ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகலுடன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.