முகப்பு
சிவகங்கை

பருவநிலை மாற்றத்தை தவிா்க்க இயற்கையை பாதுகாக்க வேண்டும்: நீதிபதி

உலக அளவில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை தவிா்க்க இயற்கையை பாதுகாக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சத்ய சாரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

உலக அளவில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை தவிா்க்க இயற்கையை பாதுகாக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சத்ய சாரா தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சா்வதேச வன நாள் மற்றும் உலக நீா் நாள் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஆா்.சத்ய தாரா தலைமை வகித்துப் பேசியதாவது : வனங்கள் பல உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது. ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. ஏனெனில் வனங்கள் மூலம் மழை பெறுவது மட்டுமின்றி இயற்கையும் வளம் பெறும்.

எனவே வீடுகள் தோறும் மரங்கள் வளா்க்க வேண்டும். இதேபோன்று, மழை நீரை சேமித்து வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி இனி வரும் காலங்களில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முன் வர வேண்டும். பல்வேறு காரணங்களால் பருவநிலை மாற்றம் ஏற்படுகின்றது. இது உலகளாவிய நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே பருவநிலை மாற்றத்தை தவிா்க்க இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கே. கருணாநிதி, குடும்ப நல நீதிபதி ஆா்.கே.பி. தமிழரசி, போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பாபுலால், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான ஆா்.மோகனா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி எம். உதயவேலவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், நீதித்துறை டி. பாரதி மற்றும் நீதித்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →