காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம்: மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் கைது!
கணவனின் சந்தேகத்தால் மனைவி, 5 குழந்தைகள் ஆணவப் படுகொலை!
காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம் தீட்டியதாக தமது மனைவி மீதான சந்தேகத்தால் அவருடன் சேர்த்து தமது குழந்தைகளையும் கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.
லாகூர் நகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலுள்ள சார்கோதா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) நள்ளிரவில் தமது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெட்டி ஆணவப் படுகொலை செய்திருக்கிறார் முகமது யாசீன் என்ற நபர்.
முகமது யாசீனின் மனைவிக்கு(45) வேறொரு ஆணுடன் தொடர்பிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபருடன் அவர் தப்பிச் செல்ல திட்டமிட்டதாக முகமது யாசீனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே, அவரது மனைவிக்கு பிறந்த 5 குழந்தைகளுக்கும் அந்த நபரே தந்தையாக இருக்கக்கூடுமோ என்ற உள்ளுணர்வும் முகமது யாசீனை நெடுங்காலமாக உறுத்தி வந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் கொல்ல அவர் முடிவெடுத்தார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த தமது மனைவி, 15 வயது மகள் மற்றும் 4 மகன்களையும் சரமாரியாகக் கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முற்பட்டார். இந்நிலையில், அவர் உயிர் பிழைத்த நிலையில், காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் பெண்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதாக மனித உரிமைகள் அமைப்புகளின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது. எனினும், அது குறித்த வழக்குகள் அதிகம் பதியப்படாமல் நீர்த்துப்போகச் செய்வதும் காலங்காலமாக அங்குள்ள குடும்பங்களில் கடைபிடிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.