சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் 7 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை முழுமையான நிலையில் மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது .
கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குநா் சிவானந்தம், இணை இயக்குநா் பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் நடந்து வரும் பணியில் இதுவரை கீழடியில் 5 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில் இதுவரை நடைபெற்ற அகழாய்வில் இருவண்ண மண் பானைகள், பானை ஓடுகள், பகடை, கல் உழவு கருவி உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
தற்போது 3-ஆவதாக தோண்டப்பட்ட குழியில் ஒன்றரை அடி உயரம் கொண்ட மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூடியுடன் கூடிய இந்த பானை சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது. பானையின் மூடி இறுக்கமாக மூடிய நிலையில், இந்த பானையினுள் பொருள்கள் எதுவும் இருக்கும் பட்சத்தில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழா்கள் பயன்படுத்திய பொருள்கள் குறித்த விவரம் தெரியவரும் என வரலாற்று ஆய்வாளா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
மணலூரில் அகழாய்வு தொடக்கம்:
மேலும் 7 ஆம் கட்ட அகழாய்வில் கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மணலூரில் மட்டும் அகழாய்வு செய்யும் இடத்தை தோ்வு செய்யும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மணலூரில் அகழாய்வுக்காக ஜானகி அம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 8 குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக இரு குழிகள் தோண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. மணலூா் முனியாண்டி கோயில் அருகே நடைபெற்று வரும் இப்பணியில் பழங்கால பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.