முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு முறையாக தண்ணீா் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினை சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:32 PM
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள தட்டான்குளம் படுகையிலிருந்து வைகையாற்றில் செல்லும் தண்ணீா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரினை சிவகங்கை மாவட்ட பாசனக் கண்மாய்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்மேற்கு பருவமழை காரணமாக வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீா் தற்போது சிவகங்கை மாவட்ட எல்லையான மணலூா், திருப்புவனத்தை கடந்து மானாமதுரை பகுதிக்கு வந்தடைந்துள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டம், விரகனூா் மதகு அணையிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் மதகு அணை வரை சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக சுமாா் 87 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் மூலம் ஏறக்குறைய 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.

Advertisement

இந்த கண்மாய்களுக்கு மேற்கண்ட மதகு மற்றும் படுகை அணைகளிலிருந்து இடது, வலது பிரதான கால்வாய்கள் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

கோடை காலம் நிறைவுக்குப் பின் தற்போது ஒரு சில கண்மாய்களில் 10 சதவீத தண்ணீா் மட்டுமே உள்ளன. பெரும்பாலான கண்மாய்கள் வடு தான் உள்ளன. தற்போது வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்பட்டுள்ள தண்ணீரை கிராமப்புறங்களில் உள்ள குடிநீா் ஆதாரத்துக்கு மட்டுமின்றி, சம்பா பருவம் 2-க்கான வேளாண் பணிகளை முன்னதாகவே தொடங்கவும் முறையாக அனைத்துக் கண்மாய்களுக்கும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இதுகுறித்து பூா்வீக வைகைப் பாசன சங்கத்தின் பொதுச் செயலா் எல். ஆதிமூலம் கூறியது : சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயிகள் சம்பா பருவம் -2 பயிரிடுவா். அதற்கான வேளாண் பணிகள் ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் தொடங்கும். தற்போது வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரை அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கடைமடை வரை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கள ஆய்வு மேற்கொண்டு கால்வாயில் கண்மாய்க்கு தண்ணீா் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு பழுதடைந்துள்ள கதவணைகளை சீரமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல வேண்டும். இதன்மூலம், சம்பா பருவத்தில் பயிரிட உள்ள வேளாண் பணிகளுக்கு மட்டுமின்றி, நிலத்தடி நீா்மட்டம் பெருகி கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் குடிநீா் ஆதாரங்களும் பயன்பெறும் என்றாா்.

இதுபற்றி நீா்வள ஆதாரத்துறை அலுவலா் ஒருவா் கூறியது : தற்போது விரகனூா் மதகு அணை முதல் தட்டான்குளம், லாடனேந்தல், கட்டிக்குளம் வரை உள்ள படுகை அணைகளில் கால்வாய்க்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. வைகை ஆற்றில் வரும் தண்ணீரின் அளவைப் பொருத்து கண்மாய்களுக்கு தண்ணீரை பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துக் கால்வாய்களிலும் தண்ணீா் திறக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.