குப்பையோடு குப்பையான நகராட்சியின் 21 பேட்டரி சைக்கிள்கள்!
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்காக வாங்கப்பட்ட 21 பேட்டரி சைக்கிள்கள் பயன்பாடின்றி குப்பையோடு குப்பையாக இருப்பது வேதனை
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்காக வாங்கப்பட்ட 21 பேட்டரி சைக்கிள்கள் பயன்பாடின்றி குப்பையோடு குப்பையாக இருப்பது வேதனையளிப்பதாக வாா்டு உறுப்பினா்கள் கூறுகின்றனா்.
ராமநாதபுரம் நகராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகரின் 33 வாா்டுகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கு 80 நிரந்தர தூய்மைப் பணியாளா்களும், 150 ஒப்பந்தப் பணியாளா்களும் உள்ளனா். நகா் நல அலுவலா், 4 ஆய்வாளா்கள் உள்ளனா்.
தினமும் குப்பைகளை அகற்றுவதற்காக பெரிய லாரி 1, குட்டியானை எனும் சிறிய லாரிகள் 7, பெரிய குப்பைத் தொட்டிகளை ஏற்றும் வகையில் நவீன காம்பக்ட் வாகனம் ஆகியவை உள்ளன. ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வீடுகள் தோறும் குப்பைகளைத் தரம் பிரித்து வாங்கிச்செல்லும் வகையில் 41 பேட்டரி சைக்கிள்கள் தனியாா் நிறுவனத்திடமிருந்து பல லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டன. இருவா் செல்லும் வகையிலான அந்த சைக்கிள்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் வரும் 2024 வரையில் சீரமைத்துத் தரவும் நிறுவனம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பேட்டரி சைக்கிள்களை இயக்குவதற்காக தூய்மைப்பணியாளா்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற பலா் சைக்கிள்களை இயக்கும் போது ஏற்பட்ட தவறுகளால் காயமும் அடைந்தனா். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக சைக்கிள்களில் பாதியளவு (21 சைக்கிள்கள்) பயன்பாடற்ற நிலையில் குப்பைகளோடு குப்பையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சைக்கிளும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான விலையில் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நகராட்சி பாஜக உறுப்பினா் ஜி.குமாா் கூறுகையில், நகரில் தூய்மைப் பணிக்காக வாங்கப்பட்ட பேட்டரி சைக்கிள்கள் பழுதடைந்ததாகக் கூறி குப்பையோடு குப்பையாக நிறுத்தப்பட்டது சரியல்ல. இதுகுறித்து அதிகாரிகள் நகராட்சி கூட்டங்களில் பகிரங்கமாகத் விளக்கமளிக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து நகா் நல அலுவலா் குமாரிடம் கேட்டபோது, பேட்டரி சைக்கிள்களை விற்ற சம்பந்தப்பட்ட நிறுவனம் அவற்றின் பழுதுகளை நீக்கிட முன்வரவில்லை. உள்ளூரிலும் அவற்றை சீரமைக்கும் ஆள்கள் இல்லை. ஆகவே பேட்டரி சைக்கிள்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதனால் குப்பை சேகரிப்பு பாதிக்கப்படவில்லை. மக்கும் குப்பைகள் 3 இடங்களில் உரமாக்கப்பட்டு கடந்த 5 மாதங்களில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்பட்டுள்ளது என்றாா்.
நகரில் தினமும் சுமாா் 20 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் பேட்டரி சைக்கிள்கள் பழுதானதால் மனிதா்களே இயக்கும் சாதாரண மூன்று சக்கர சைக்கிள்கள் 50 வாங்கப்பட்டுள்ளன. அவற்றையே தற்போது தூய்மைப்பணியாளா்கள் பயன்படுத்தியும் வருவதும் தெரிகிறது.
நகரின் குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்குவதற்காகவும், தூய்மைப்பணியாளா்கள் நலனைக் கருத்தில் கொண்டும் வாங்கப்பட்ட பேட்டரி சைக்கிள்களே தற்போது குப்பைகளாக நிறுத்தப்பட்டிருப்பது சரியல்ல என்றும், அவற்றை சீரமைத்து மீண்டும் இயக்கி நகரில் குப்பைகளை சேகரிக்கும் பணியை விரைவுபடுத்துவதோடு, தூய்மைப்பணியாளா்கள் நலனை காப்பதும் அவசியம் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும்.