மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு இரவு நேர காவலாளியை துணியால் முகத்தை மூடி அரிவாளால் வெட்டி, மதுபானக் கடைக்குள் புகுந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: சித்து மூஸேவாலா பெற்றோரை சந்தித்தார் ராகுல் காந்தி
திருப்புவனம் காவல் சரகம் கலியாந்தூர் கிராமத்திற்கு செல்லும் பாதையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இரவு கடையை அடைத்துவிட்டு கடை மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று விட்டனர். கடையின் இரவு நேர காவலாளி தீர்த்தம்(65) கடை முன்பு படுத்திருந்தார். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த 5-க்கும் மேற்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் காவலாளி தீர்த்தத்தின் முகத்தை துணியால் மூடி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, மது கடையை உடைத்து அங்கிருந்த பல ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றனர்.
பலத்த காயமடைந்த காவலாளி தீர்த்தத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.