மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
திருப்புவனம் அக்ராகரம் தெருவில் அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் விழாவின் முக்கிய வைபவமாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அழகிய மணவாள ரங்கநாத பெருமாளும் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
அதைத் தொடர்ந்து திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. மகா தீபாராதனை நடைபெற்றது. அழகிய மணவாள ரங்கநாதப் பெருமாள் சார்பில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு தரிசித்தனர். அதைத் தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.