மானமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்ட மாடுகள் பந்தயத்தில் பங்கேற்று ஓடின. மானாமதுரை கல்குறிச்சி பகுதியில் சிவகங்கை சாலையில் இந்த மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தைக் காண சாலையின் இருபுறங்களிலும் ஏராளமானோர் கூடி நின்றனர். போட்டியில் பங்கேற்ற மாடுகள் மிரண்டு ஓடி மாட்டு வண்டிகள் சாலையோரத்தில் இருந்த பள்ளத்துக்குள் கவிழ்ந்தன.
மாட்டு வண்டிப் பந்தயம் நிறைவடைந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் போட்டியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும் மாட்டு வண்டிகளை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கு சிறப்பு பரிசுகளையும் அமைச்சர் பெரியகருப்பன் வழங்கிப் பேசினார். மேலும் போட்டிக்கான ரொக்கப் பரிசுகளை வழங்கிய திமுகவினரையும் அமைச்சர் பாராட்டி கெளரவப்படுத்தினார்.
இவ்விழாவில் திருப்புவனம் பேரூராட்சித் நலைவர் த. சேங்கைமாறன், மானாமதுரை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் துரை. ராஜாமணி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துசாமி, ஓய்வுபெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, ஒன்றியத் தலைவர் லதா, நகர்மன்றத் தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் எஸ்.பாலசுந்தரம், மேற்கு ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, நகராட்சி வார்டு உறுப்பினர்கள் சோம. சதீஷ்குமார், பி. புருஷோத்தமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.