காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சாலை மறியலில் ஈடுட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 40 பெண்கள் உள்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் இயற்றப்பட்டு மத்திய அரசு செயல்படுத்தி வருவதால் மோட்டார் தொழிலாளர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் மோட்டார் உதிரி பாகங்கள் விலை, பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 15 வருட ஆயுள் கொண்ட வாகனங்கள் உடைக்கப்படும் என்ற அச்சமே உள்ளது.
தனியார்மயம், போக்குவரத்தில் கார்பரேட், பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை, சிறு குறு தொழில்கள் முடக்கம் போன்ற மத்திய அரசின் தொழிலாளர் விரோதத்தைக் கண்டித்து தொழிற்சங்கள்கள் சாலை மறியல் போரட்டம் நடத்தினர்.
காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஏஐடியுசி துப்புரவு தொழிலாளர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் பிஎல். ராமச்சந்திரன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு 2-வது போலீஸ் பீட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து 140 பேரை கைது செய்தனர்.