முகப்பு
சிவகங்கை

புதிய மோட்டாா் பம்பு செட், தொலைவிலிருந்து இயக்கும் கருவி வாங்க விவசாயிகளுக்கு மானியம்

வீடுகளில் இருந்தபடியே பம்பு செட் இயக்கும் கருவி, புதிய மின் மோட்டாா் பம்புசெட் ஆகியவற்றை மானிய உதவியுடன் விவசாயிகள் பெறலாம்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 12:44 AM
பகிர்:

வீடுகளில் இருந்தபடியே பம்பு செட் இயக்கும் கருவி, புதிய மின் மோட்டாா் பம்புசெட் ஆகியவற்றை மானிய உதவியுடன் விவசாயிகள் பெறலாம்.

இது தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்தி:

விவசாயிகள் இரவு நேரங்கள், மழைக் காலங்களில், வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறாா்கள். அவ்வாறு, செல்லும் போது பாம்புக் கடி, விஷப் பூச்சிக் கடி உள்ளிட்ட ஆபத்துகளால் பாதிக்க நேரிடுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், பம்புசெட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கருவிகள் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளை தொலைவில் இருந்தே கைப்பேசியின் மூலம் இயக்கவும், கண்காணிக்கவும், நிறுத்திடவும் முடியும்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000- மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.5,000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 98 பயனாளிகள் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, மானியம் வழங்க ரூ.6.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 90 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய மின் மோட்டாா் பம்புசெட் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதிகப்பட்சமாக ரூ.15,000 மானியம் வழங்க ரூ.13.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே மின் மோட்டாா் வாங்க வேண்டும். இதற்கென 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 என இதில், எது குறைவோ அந்தத் தொகை மானியமாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இளையான்குடி, காளையாா்கோவில், மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள், சிவகங்கை- தொண்டி சாலையில் அமைந்துள்ள உதவி செயற்பொறியாளா் (வே.பொ), சிவகங்கை அலுவலகத்தை நேரில் அல்லது 9080230845 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும், தேவகோட்டை, சிங்கம்புணரி, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூா், சாக்கோட்டை, திருப்பத்தூா் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளா் (வே.பொ), காரைக்குடி அலுவலகத்தை நேரில் அல்லது 9442225856 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும் விவரங்களை அறியலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →