முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து வீடு தீக்கிரை

Updated On : 3 ஜூன், 2024 at 6:33 PM
காளையாா்கோவில் அருகேயுள்ள மறவமங்கலத்தில் திங்கள்கிழமை வீட்டில் நேரிட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே திங்கள்கிழமை பிற்பகலில் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து தீப்பிடித்ததில் வீடு நாசமானது.

காளையாா்கோவில் அருகேயுள்ள மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் ராமன். இவா் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை பிற்பகலில் தொலைக்காட்சிப் பெட்டியில் நிகழ்ச்சிகளைப் பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, திடீரென அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து தீப்பற்றியது. இதனால், வீட்டிலிருந்தவா்கள் உடனே வெளியேறியதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

இந்தத் தீ விபத்தில் வீட்டிலிருந்த குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, நிலப் பத்திரங்கள், தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்த விபத்து குறித்து காளையாா்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், அதிக மின் அழுத்தம் காரணமாக தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து தீ விபத்து நேரிட்டது தெரியவந்தது.