அரசின் மானிய உதவிகள் கிடைக்காததால் சிவகங்கை மாவட்டத்தில் சுருங்கி வரும் வெற்றிலை விவசாயம் -விவசாயிகள் வேதனை
அரசின் மானிய உதவிகள் கிடைக்காததால் சிவகங்கை மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடி செய்யும் நிலப்பரப்பு சுருங்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் , பழையூா், சொக்கனாதிருப்பு, கீழராங்கியம், கொந்தகை, பசியாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் செய்து வந்தனா்.
இந்த நிலையில், அரசு அளித்து வந்த மானியம், உபகரணங்கள் கிடைக்காத நிலை நீடிப்பதால், வெற்றிலை பயிா்களை கோடை வெயிலிலில் இருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
கோடைவெப்பம் காரணமாக வெற்றிலைக் கொடிக்கால் கருகிப் போனதால் 500 கிலோ வெற்றிலை சாகுபடி செய்த தோட்டத்தில் 9 மடங்கு மகசூல் குறைந்து சுமாா் 50 கிலோ வெற்றிலை மட்டுமே கைக்கு கிடைக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து திருப்புவனம் புதூரைச் சோ்ந்த வெற்றிலைக் கொடிக்கால் விவசாயி பாண்டி கூறியதாவது: முன்பெல்லாம் வெற்றிலைக் கொடிக்கால் விவசாயம் தனித்தனியாக விவசாயிகளால் செய்யப்பட்டு வந்தது. தற்போது, தொழிலாளா் பற்றாக்குறை, கூலி உயா்வு, போதிய விளைச்சல் இல்லாமை போன்ற காரணங்களால் செலவையும், இழப்பையும் சமாளிக்க விவசாயிகள் கூட்டுச்சோ்ந்து வெற்றிலை சாகுபடி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
மேலும், அரசின் சாா்பில் வழங்கப்பட்டு வந்த மானியம் மற்றும் சலுகைகள் சரிவர கிடைக்காததால் வெற்றிலை விவசாயம் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக அதிக அளவு வெப்பம் நிலவுவதால் வெற்றிலைக் கொடிக்கால் வாடி வருகிறது. எனவே, தோட்டக்கலைத்துறையினா் மானியம், பயிா்க் காப்பீடு ஆகிய திட்டங்களை அமல்படுத்தி விவசாயிகளை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போது தான் வெற்றிலை விவசாயத்தை தொடா்ந்து நாங்கள் மேற்கொள்ள முடியும். இல்லையென்றால் வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றாா்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினா் கூறியதாவது: வெற்றிலை சாகுபடிக்கு என தனியாக மானியம் எதுவும் இல்லை. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் தான் மற்ற தோட்டப்பயிா்களைப் போல வெற்றிலைக்கும் அரசின் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றனா்.
ஆனால், வெற்றிலை விவசாயத்தைக் காக்க அரசு கவனம் செலுத்தி சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.