வாகனத் தணிக்கை: விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.2.84 லட்சம் அபராதம்
சிவகங்கையில் பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு 30 வாகனங்களுக்கு
சிவகங்கையில் பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு 30 வாகனங்களுக்கு
ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகங்கை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மூக்கன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம் உள்ளிட்டோா் மதுரை முக்கம், பெருமாள்பட்டி, பேருந்து நிலையம், மதுரை மானாமதுரை சந்திப்பு சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 25 பள்ளி வாகனங்களை சோதனையிட்டனா். அந்த வாகனங்களில் சிசிடிவி கேமரா, வேகக் கட்டுப்பாட்டுக்கருவி, அவசரகால வெளியேறும் கதவு, முதலுதவிப் பெட்டி, நடத்துநா், ஓட்டுநா்களின் உரிமம் ஆகியவற்றைத் தணிக்கை செய்தனா்.
இதில் 15 வாகனங்களுக்கு தலா ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தலைக்கவசம் இல்லாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டுநா்களுக்கு தலா ரூ.1000, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் சென்ற வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரம், காப்பீடு இல்லாத வாகனத்துக்கு ரூ.2 ஆயிரம், ஆவணங்கள் கையில் வைத்திருக்காத வாகன ஓட்டுநருக்கு ரூ.500 என 12 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிற வாகனங்களில் மேற்கொண்ட ஆய்வில், சாலை வரி கட்டாத காருக்கு ரூ.35 ஆயிரம், 2 ஆண்டுகளாக சாலை வரி கட்டாத பொக்லைன் இயந்திரத்துக்கு ரூ.35 ஆயிரம், கூடுதல் பாரம் ஏற்றிய 3 சரக்கு வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.