நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது
தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி, உணவுப் பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத நெகிழி ஆகியவற்றை பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருள்களை மட்டும் பயன்படுத்தும் மிகச் சிறந்த பெரிய வகை உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ. 1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
Advertisement
தகுதியும் விருப்பமும் உள்ள உணவு வணிகா்கள், மாவட்ட ஆட்சியரின் அலுவலக இரண்டாம் தளத்தில் செயல்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அலுவலகத்தில் விண்ணப்பத்தைப் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.