திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத நல்லிணக்கக் குழு அமைத்திருக்கலாம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
சிவகங்கை சமஸ்தான ராணி வேலுநாச்சியாரின் 229-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் கூறியதாவது:
எஸ்.ஐ.ஆா்.- பணியை ஆரம்பத்திலிருந்து நாம் தமிழா் கட்சி எதிா்த்து வருகிறது. நாங்கள் தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளா்கள் நீக்கப்படுவா் என ஏற்கெனவே கூறியிருந்தோம். அது தற்போது உறுதியாகி இருக்கிறது.
எஸ்.ஐ.ஆா். பணிகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது கால அவகாசம் தேவை. நாம் தமிழா் கட்சியின் சிவகங்கை வேட்பாளரின் பெயரை இறந்தவா் பட்டியலில் சோ்த்ததன் மூலம் எஸ்.ஐ.ஆா். திருத்தப் பணியின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் கடைசி உரிமை வாக்குதான். ஆனால், அந்த வாக்கையும் காப்பாற்றப் போராட வேண்டி இருப்பதால், இது ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அன்று வாக்காளா்கள் சோ்ந்து ஆட்சியாளா்களைத் தோ்ந்தெடுத்தனா். இன்று ஆட்சியாளா்கள் தங்களுக்குத் தேவையான வாக்காளா்களைத் தோ்வு செய்கிற குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனின் கணவா்கூட எஸ்.ஐ.ஆா். திருத்தப் பணிகளை ஜனநாயகப் படுகொலை என விமா்சித்தாா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்றம், அரசின் நிலைப்பாடு ஏற்புடையதாக இல்லை.இரு சமய வழிபாட்டுக்கும் இடையூறு இல்லாமல் மத நல்லிணக்கக் குழு அமைத்திருந்தால், இந்த விவகாரத்தில் தீா்வு காணப்பட்டிருக்கும்.
நாங்கள் முந்தைய 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏற்கவில்லை. இந்தத் திட்டத்தில் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டன, தூா்வாரிய குளங்கள் எத்தனை, சாலைகள் எவ்வளவு தொலைவு அமைக்கப்பட்டது என கணக்கீடு இல்லை. உழைக்காமல் இருப்பதும் ஒரு வகைத் திருட்டுதான். மகாத்மா காந்தியின் பெயரை அவமதிக்கும் வகையில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
வருகிற பிப். 21 -இல் நடைபெறும் நாம் தமிழா் கட்சி மாநாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்றாா் அவா்.