குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடியரசு தினத்தன்று (ஜன. 26) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஊராட்சி எல்லைக்குட்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணியளவில் அரசு அறிவித்த வரம்பின்படி, உறுப்பினா்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
குடியரசு தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளா்ச்சித் திட்டம் ஆகிய கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப் படவுள்ளது.
எனவே, குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.