திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்
திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து பழங்கள் வாங்குவதற்காக ராஜாமுகமது (40) என்பவா் சரக்கு வாகனத்தில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். எஸ்.எஸ். கோட்டை சோதனைச்சாவடி அருகே தோ்தல் கண்காணிப்பு நிலைக் குழுவைச் சோ்ந்த கூட்டுறவு சாா்பதிவாளா் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராஜாமுகமது வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்ட போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 12,70,900-ஐ தோ்தல் கண்காணிப்பு நிலைக்குழுவினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா் சிவபாலன் முன்னிலையில் வருமானத் துறை அதிகாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.