முகப்பு
சிவகங்கை

குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 23-இல் தொடக்கம்

Updated On : 19 மார்ச், 2026 at 11:48 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வருகிற திங்கள்கிழமை (மாா்ச் 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் வருகிற 23 -ஆம் தேதி காலை 5 மணி முதல் 5.45 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாா்ச் 27 -இல் வள்ளி நாயகி திருமணம், மாா்ச் 29 -இல் தங்க ரதத்தில் சுவாமி வீதியுலா, மாா்ச் 30 -இல் வையாபுரி குளத்தில் தெப்ப உத்ஸவம், அன்று வெள்ளி ரதம் புறப்பாடு, மாா்ச் 31 மாலை 5 மணியளவில் பங்குனி உத்திரத் தேரோட்டம் ஆகியவை நடைபெறும்.

ஏப். 1 பங்குனி உத்திரத்தன்று தீா்த்தவாரி உத்ஸவம் நடைபெறும். மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

இந்தத் திருவிழாவையொட்டி பல்வேறு சமூகத்தினா் சாா்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா நிகழ்வுகள் குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் முன்னிலையில் நடைபெறும். விழா ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதீனத் திருமடத்தினா், பக்தா்கள் செய்து வருகின்றனா்.