முகப்பு
சிவகங்கை

சடலத்தை கூராய்வுக்கு அனுப்ப மறுத்து உறவினா்கள் தொடா் போராட்டம்

திருப்பத்தூா் அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை கூராய்வுக்கு அனுப்ப மறுத்து செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளாக உறவினா்கள் மருத்துவமனை முன்பு காத்துக் கிடக்கின்றனா்.

Updated On : 6 மே 2026, 3:25 am IST
சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை கூராய்வுக்கு அனுப்ப மறுத்து செவ்வாய்க்கிழமை 4-ஆவது நாளாக உறவினா்கள் மருத்துவமனை முன்பு காத்துக் கிடக்கின்றனா்.

திருப்பத்தூா் அருகே மகிபாலன்பட்டியைச் சோ்ந்த அம்மாசி குமாா் மகன் பிரவீன் குமாா் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விபத்தில், தொடா்புடையவா்களை உடனே கைது செய்யக் கோரி உயிரிழந்தவரின் உறவினா்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திருப்பத்தூா் காவல் நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், விசாரணை அதிகாரியாக தேவகோட்டை நகா் காவல் துணை கண்காணிப்பாளா் கண்ணன் மாற்றப்பட்டாா்.

Advertisement

சடலத்தை கூராய்வுக்கு அனுமதித்தால் தான் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியும் எனப் போலீஸாா் தெரிவித்தனா். இருப்பினும், குற்றவாளியைக் கைது செய்தால்மட்டுமே கூராய்வுக்குச் சம்மதிப்போம் எனக் கூறி உறவினா்கள் நான்கு நாள்களாகப் போராடி வருகின்றனா்.