போடி நகராட்சி பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து, திண்டுக்கல், மதுரை, சேலம், கோவை, திருச்சி, பழனி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட நீண்ட தொலைவு பேருந்துகளும், தேனி, உத்தமபாளையம், கம்பம், தேவாரம், சின்னமனூர் உள்ளிட்ட அருகிலுள்ள ஊர்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போடியைச் சுற்றியுள்ள பகுதியினரும், கேரள மாநில மக்களும் போடிக்கு வந்து பிற ஊர்களுக்குச் செல்கின்றனர். மேலும், போடியிலிருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் வெளியூர்களுக்குச் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில், போடி பேருந்து நிலையத்தில் முன்னர் பேருந்து கால அட்டவணை வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம், எந்ததெந்த நேரத்தில் எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற விவரம் அறிந்து அதற்கேற்றாற்போல் பயணிகள் தங்களது பயணத்தை அமைத்துக் கொண்டனர். ஆனால், தற்போது பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் நடைபெற்ற நிலையில், பேருந்து கால அட்டவணை இல்லை.
இதனால், பேருந்துகள் இயக்கப்படும் நேரம் தெரியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக போடி கிளை நிர்வாகமோ அல்லது போடி நகராட்சி நிர்வாகமோ உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்துக்குள் பேருந்து கால அட்டவணை வைக்கவேண்டும் என, பொதுமக்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.