முகப்பு
தேனி

போடியில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

போடியில் புதன்கிழமை நடைபெற்ற பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒரு முறை பயன்படுத்தும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

போடியில் புதன்கிழமை நடைபெற்ற பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தும், பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
 போடி நகராட்சியில் பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி ஆணையர் மா.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. நகர்நல அலுவலர் பா.ராகவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் போடி வர்த்தக சங்கச் செயலர் வேல்முருகன், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கலைச்செல்வன் மற்றும் மருந்தகங்கள் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
 கூட்டத்தில் போடி நகரை மீண்டும் பிளாஸ்டிக் இல்லா நகரமாக மாற்ற ஆலோசிக்கப்பட்டது. இதில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்களை வர்த்தகர்களும், பொதுமக்களும் பயன்படுத்தக் கூடாது, 50 மைக்ரானுக்கு அதிக அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை பயன்படுத்த நகராட்சி அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த 15 நாள் அவகாசம் வழங்க கோரப்பட்டது.
 அதே போல் வர்த்தகர்களோ, பொதுமக்களோ குப்பை கழிவுகளை சாலை மற்றும் சாக்கடையோரங்களில் கொட்டாமல் குப்பைகளை சேகரிக்க வரும் நகராட்சி ஊழியர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிப்பதுடன், பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய வர்த்தகர் சங்கம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் சாக்கடை கட்டுவதில் குறைபாடு, சாக்கடைகளில் குப்பைகளை அகற்றுவதில் குறைபாடுகளை சுட்டிக்காட்டினர்.
 அதே போல் குடிநீரில் குளோரின் கலப்பு அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
     கூட்ட ஏற்பாடுகளை போடி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →