தேனி மாவட்டம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனி அல்லிநகரத்தில் வெள்ளிக்கிழமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தேனி வட்டாரத் தலைவர் பெத்தலீஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு தலைவர்கள் பகத்சிங், சுகதேவ், முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
தேனி மாவட்டத்தில் வறட்சி பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை 50 சதவிகிதம் குறைத்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடுக்கை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் கே.ராஜா, செயலர் கே.ஆர்.லெனின், பொருளாளர் ரவீந்திரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.