தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆதார் எண் இணைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்ட அரசு உதவித்தொகையை மீண்டும் வழங்கக் கோரி கோவிந்தநகரத்தைச் சேர்ந்த மூதாட்டி, ஆட்சியர் ந. வெங்கடாசலத்திடம் மனு அளித்தார்.
தேனி அருகே கோவிந்தநகரத்தைச் சேர்ந்தவர் வேலு ஆசாரி மனைவி பேச்சியம்மாள் (93). ஆதரவற்ற நிலையில் உள்ள பேச்சியம்மாள், அரசு மூலம் மாதம் ரூ.1,000 முதியோர் உதவித்தொகைப் பெற்று வந்தாராம். இந்தப் பணத்தை வாழ்வாதராமாக வைத்துக் கொண்டு, கோவிந்தநகரம் பகுதியில் கோயில், மடம் மற்றும் தெரிந்தோர் வீடுத் திண்ணைகளில் படுத்து உறங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், வங்கிக் கணக்கு மற்றும் முதியோர் உதவித்தொகை ஆவணத்தில் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைக்காததால், பேச்சியம்மாளுக்கு கடந்த 4 மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்திருந்தும் தனக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்றும், தான் உயிர் வாழ்வதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெற்று, நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை தனக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் பேச்சியம்மாள் மனு அளித்தார். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.