கேரள மாநிலம் சபரிமலை பம்பையாற்றில் பக்தர்களால் விடப்பட்ட கழிவுதுணிகளை பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் சுத்திகரிப்பு செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் புதன்கிழமை அவை திருப்பியனுப்பப்பட்டன.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் திரும்பும் போது பம்பையாற்றில் தங்களது துணிகளை விட்டு செல்கின்றனர். இதனால் ஆறு மசுபடுவதாகக் கூறி அதனை தேவசம் போர்டு சேகரித்து விற்பனை செய்கிறது. இதனை பெரியகுளத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (35) என்பவர் ஏலம் எடுத்து, அதனை பெரியகுளம் அருகே சருத்துப்பட்டிக்கு வெளியே வைத்து பிரித்து விற்பனை செய்கிறார்.
இவ்வாறு இப்பகுதியில் பிரிக்கப்படும் துணிகளால் துர்நாற்றம் வீசுவதாகவும், நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறி அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் கிருஷ்ணக்குமார் அப்பகுதியில் ஆய்வு செய்து அதனை அகற்ற உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புதன்கிழமை வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் அவை லாரியில் ஏற்றப்பட்டு திருப்பியனுப்பப்பட்டன.