தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை, விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு, மாவட்டச் செயலர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் பெ.தங்கம், மாநிலக் குழு உறுப்பினர் திருமலைக்கொழுந்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். இந்த ஆண்டு பயிர் சாகுபடிக்கு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கங்களில் பயிர்க் கடன் வழங்க வேண்டும். 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் செல்லன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் இளையராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் பெத்தாட்சி ஆஸாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.