போடியில், 2-ஆவது திருமணம் செய்ததைத் தட்டிக் கேட்ட, முதல் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கிளி ஜோதிடரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போடி, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (40). இவர் கிளி ஜோதிடம் பார்த்து வருகிறார். இவருக்கும் காமாட்சி (35) என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நாகராஜ் குடித்து விட்டு வந்து அடிக்கடி தகராறு செய்ததால் சில ஆண்டுகளாக கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே நாகராஜ், சாரதா என்ற பெண்ணை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டாராம்.
இதனை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் நாகராஜ், அவரது தந்தை ராசு, தாயார் வேலம்மாள், சகோதரர்கள் முருகன், கருணையா மற்றும் நாகராஜின் 2-ஆவது மனைவி சாரதா ஆகியோர் சேர்ந்து காமாட்சியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து காமாட்சி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் சரசுவதி மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.