தேனி மாவட்டத்தில் 33 கண்மாய்களில் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் பொதுப் பணித்துறை சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வார உள்ள 33 கண்மாய்களில் நிலச் சீர்திருத்தப் பணிக்கு
தேனி மாவட்டத்தில் பொதுப் பணித்துறை சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வார உள்ள 33 கண்மாய்களில் நிலச் சீர்திருத்தப் பணிக்கு மண் எடுக்க விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்திருப்பதாவது: பொதுப் பணித்துறை சார்பில் மஞ்சளாறு வடிநில கோட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 8 கண்மாய்கள், க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 2 கண்மாய்கள், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 9 கண்மாய்கள், பெரியாறு-வைகை வடிநிலக் கோட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்தில் 11 கண்மாய்கள், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கண்மாய்கள் உள்பட மொத்தம் 33 கண்மாய்கள் பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரப்பட உள்ளன. இந்த கண்மாய்கள் பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
நிலச் சீர்திருத்தப் பணிகளுக்காக வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள், மண் பாண்டத் தொழில் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு மண் தேவைப்படுவோர் இந்தக் கண்மாய்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் மற்றும் கிராவல் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். வரும் ஜூன் மாதம் பருவமழை தொடங்குவதற்கு முன் கண்மாய்களை தூர்வாரி மண் எடுப்பதால், நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.