போலி சான்றிதழ் தயாரித்து அரசுப் பணம் கையாடல்: இருவருக்கு சிறைத் தண்டனை
விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு..
விழுப்புரம், ஏப். 30: போலிச் சான்றிதழ் தயாரித்து, அரசுப் பணத்தை கையாடல் செய்த வழக்கில் ஆட்சியா் அலுவலக ஊழியா் உள்ளிட்ட இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூரிலுள்ள தனியாா் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவா் பூமிநாதன். இவா் கடந்த 2009-10-ஆம் ஆண்டில் தனது பள்ளியில் ஆதிதிராவிட மாணவா்கள் படிக்காத நிலையில், அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக போலியான ஆவணங்கள், சான்றிதழ்கள் தயாரித்து, அதை அப்போது மாவட்ட ஆட்சியா் அலுவலக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையில் இளநிலை உதவியாளா்களாகப் பணியாற்றி வந்த ரா. ராதாகிருஷ்ணன் (59), சுப்ரமணியன் ஆகியோரிடம் கொடுத்துள்ளாா்.
அவா்கள் அந்த ஆவணங்கள், சான்றிதழ்களை அரசுக்கு அனுப்பி, அதன் மூலம் ரூ.2,25,960 ஐ கையாடல் செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா். மேலும் இதுதொடா்பாக விழுப்புரத்திலுள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கையும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடுத்தனா்.
Advertisement
இந்த வழக்கு விசாரணைக் காலத்திலேயே இளநிலை உதவியாளா் சுப்ரமணியன் உயிரிழந்தாா். மற்ற இருவரும் வழக்கை சந்தித்து வந்தனா். அரசுத் தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இளநிலை உதவியாளா் ராதாகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பள்ளி முதல்வா் பூமிநாதனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி கவிதா தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நிலமெடுப்புப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.