தேனி மாவட்டம், குமுளி மற்றும் கம்பம் பேருந்து நிலையங்களில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 502 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறை பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் உத்தரவுப்படி, மாவட்ட வருவாய்த் துறை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு தனிப்பிரிவு அலுவலர் கா. ஜாஹீர் உசேன், வருவாய் ஆய்வாளர் எஸ். பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை அதிகாலை குமுளிக்கு வந்த பேருந்துகளை சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதேபோல், கம்பம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஏற்றுவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
அவற்றை, தனிப்பிரிவு படையினர் பறிமுதல் செய்து, அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும், கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.