தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற இரண்டு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கம்பம் மெட்டுசாலை 18 ஆம் கால்வாய் பகுதியில் கம்பம் வடக்கு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது மற்றொரு நபர் ஓடிவிட்டார். போலீஸில் சிக்கியவரிடம் ஒரு கிலோ, 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை கருணாபுரத்தைச் சேர்ந்த சாபு (43) என்பதும், கேரளாவிற்கு கடத்துவதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து சாபுவைக் கைது செய்து, தப்பி ஓடிய கம்பம் சொசைட்டி தெருவைச் சேர்ந்த சிவசாமியை (43) தேடி வருகின்றனர்.