தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் சமீபத்தில் பெய்த மழைக்கு, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, ஓடைகளில் பல அடி உயரத்துக்கு மணல் மேடுகள் உருவாகியுள்ளன. இந்நிலையில், கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள பெரும்பான்மையான ஓடைகளில் அதிகளவில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய நிலங்கள் பாலை வனமாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
கேரளத்தில் ஆறுகள், ஓடைகளில் மணல் அள்ளுவதற்கு அந்த மாநில அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆனால், இடுக்கி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்தே தினமும் ஏராளமான லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு உள்ள நிலையில், இங்கிருந்து கேரளத்துக்கு ஏராளமான லாரிகளில் கொள்ளைப்போகும் கனிம வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மணல் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.