பெண்ணிடம் திருட முயற்சி: மற்றொரு பெண் கைது
தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை பெண்ணிடம் பணப் பையை பறித்துக்கொண்டு
தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை பெண்ணிடம் பணப் பையை பறித்துக்கொண்டு, தப்பிச் செல்ல முயன்ற மற்றொரு பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் வண்டன்மேட்டைச் சேர்ந்த ஏலத்தோட்ட தொழிலாளி சித்ரா (38). இவர் சனிக்கிழமை கம்பம் வந்தார். சின்னமனூர் ஒன்றியம் பூசாரி கவுண்டன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக, அவர் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சித்ரா அருகே நின்ற மற்றொரு பெண் ஒருவர் பேச்சு கொடுத்தார். அந்த பெண் திடீரென சித்ராவின் பையை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றார். உடனே சித்ரா சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் கூடி, பையைத் திருடிச் செல்ல முன்ற பெண்ணை பிடித்தனர். பின்னர் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் அந்த பெண் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில், கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன் பட்டியைச் சேர்ந்த விஜயா (40) என்பது தெரிய வந்தது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.