தேனியில் ஜாக்டோ-ஜியோ சாலை மறியல்: 1,817 பேர் கைது
தேனியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 1,817 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும்
தேனியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 1,817 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
"ஜாக்டோ-ஜியோ' அமைப்பின் சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு
மற்றும் அங்கன்வாடி மையப் பணியாளர்கள் செவ்வாய்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தேனியில் நேருசிலை அருகே "ஜாக்டோ-ஜியோ' அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அமைப்பாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுருளிராஜன் தலைமையில் தேனி காவல் நிலைய போலீஸார், மறியலில் ஈடுபட்ட 1,312 பெண்கள் உள்பட மொத்தம் 1,817 பேரை கைது செய்தனர். மறியல் போராட்டத்தால் அப் பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5,507 பேர் பங்கேற்பு: மாவட்டத்தில் மொத்தம் 5,507 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையப் பணியாளர்கள் பணிக்கு வரவில்லை.
இதனால் தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசுப் பள்ளிகளில் பெரும்பாலான இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் வகுப்புகள் நடைபெறவில்லை.
ஆர்ப்பாட்டம்: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் காவல் துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் சிவக்குமார் தலைமையில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி: பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஜாக்டோ- ஜியோ சார்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பழனி-தாராபுரம் சாலையில் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட ஆண்கள் 361பேர், பெண்கள் 201 பேர் என மொத்தம் 562 பேரை பழனி நகர் போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழக ஆசிரியர் கூட்டணி ஒட்டன்சத்திரம் வட்ட செயலாளர் ப.செல்லமுத்து,தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒட்டன்சத்திரம் வட்ட தலைவர் ஆறுமுகம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒட்டன்சத்திரம் வட்டத் தலைவர் ஆர்.பொன்ராஜ் ஆகியோர் தலைமையிலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பழனிச்சாமி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட இணைச் செயலாளர் நல்லதம்பி ஆகியோர் முன்னிலையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 310 பேரை ஒட்டன்சத்திரம் போலீஸார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.