ஆண்டிபட்டியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகர் காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டப் பொதுச் செயலரும், சட்டப்பேரவைத் தொகுதி தலைவருமான வழக்குரைஞர் குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி, அமைப்புச் செயலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாநிலச் செயலர் சீனிவாசன், பொறுப்பாளர்களுக்கான பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அதில், ஒவ்வொரு வாக்குச் சாவடி வாரியாக 200-க்கும் அதிகமான புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். வாகனங்களில் பிரசாரங்களை மேற்கொள்ளுதல், மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தல், மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மகளிர் குழுக்களை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவை பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, ஆண்டிபட்டி 8 ஆவது வார்டு தலைவர் நல்லதம்பி வரவேற்றார். முடிவில், ஒன்றியத் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.