தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஒட்டு குளத்தில் மண் அள்ளுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் மண் எடுப்பதை நிறுத்த ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பத்தில் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான ஒட்டுக்குளம் உள்ளது.இதில் விவசாய பயன்பாட்டுக்காக மண் எடுக்க மாட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிலர் மண் அள்ளி வந்தனர். மேலும் சிலர் அனுமதி பெறாமல் மண் எடுத்தனர்.
விதிமுறைகளை மீறி மண் அள்ளுவதாக வந்த புகாரின் பேரில் உத்தமபாளையம் வட்டாட்சியர் சத்தியபாமா ஆய்வு செய்து மண் அள்ள தடை விதித்தார். ஆனால் தற்போது வியாழக்கிழமை முதல் மீண்டும் மண் எடுக்க தொடங்கியுள்ளனர்.
பொதுப்பணித்துறையினர் வழங்கிய அனுமதி சீட்டு முறையாக பயன்படுத்தப்படாமலும், கனரக வாகனங்களை பயன்படுத்தி, விதிகளை மீறி மண் அள்ளுவதாகவும் கம்பம் பகுதி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.