"ஸ்மார்ட் கார்டுகளை' தொலைத்த அட்டைதாரருக்கு, ஆதார் அட்டை மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்த திட்டம், கம்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் உணவு வழங்கல் துறையினர் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில், "ஸ்மார்ட் கார்டுகளை' தொலைத்தவர்கள் அது குறித்த விவரத்தை சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடையில் தெரிவிக்க வேண்டும். பின்னர், "ஸ்மார்ட் கார்டில்' இணைத்துள்ள ஆதார் எண்ணை தெரிவித்து, நியாய விலைக் கடையில் தேவையான உணவுப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என, வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் பெ. மோகன் முனியாண்டி நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர், ஸ்மார்ட் கார்டு காணாமல் போனாலும், உணவுப் பொருள்களை சம்பந்தப்பட்ட கடைகளில் ஆதார் கார்டை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்கள் தர மறுத்தால் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.