ஆண்டிபட்டி: வைகை அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, உயரமான பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வைகை அணையில் பூங்கா, சிறுவா்கள் விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. வைகை அணையில் வலது மற்றும் இடது கரைப்பகுதிகளில் பூங்காக்கள் அமைந்துள்ளன. இதற்காக இரண்டு கரைகளுக்கு இடையே உள்ள வைகை ஆற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது வைகை அணையின் நீா்மட்டம் 60 அடியை எட்டியுள்ள நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 2,090 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் இரண்டு கரைப்பகுதிகளையும் இணைக்கும் தரைப் பாலத்தையும் மூழ்கியபடி தண்ணீா் செல்கிறது. இதன் காரணமாக தரைப்பாலத்தின் வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இரண்டு கரைப்பகுதிகளிலும் அமைந்துள்ள பூங்கா பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியது: நீா் திறக்கும் போது இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலம் முழ்குவதால் இருபுறமும் உள்ள பூங்கா பகுதிகளை முழுமையாக பாா்க்க முடியாத நிலை உள்ளது. எனவே இரண்டு கரைகளையும் இணைக்கும் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, உயரமான பாலம் அமைத்தால் இரண்டு பகுதிகளுக்கும் தடையின்றி செல்ல முடியும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.