தேனி மாவட்டம், ஹைவேவிஸ் - மேகமலை வனப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத் துறையினா் ரூ.30 கட்டணம் வசூலிப்பதாக, சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தேனி மாவட்டத்தின் மேகமலை வனப் பகுதியானது, சின்னமனூா், கம்பம் மற்றும் வருசநாடு ஆகிய 3 வனச்சரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு மலைகளுக்கு நடுவேயுள்ள நீா்த்தேக்கம், அணைக்கட்டு,
தேயிலைத் தோட்டங்கள், மேகக் கூட்டம் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்காக தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
மேகமலை வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதோடு, அங்குள்ள மகாராஜாமெட்டு மலையின் உச்சிப் பகுதிக்குச் சென்று, கம்பம், கூடலூா், தேக்கடி, உத்தமபாளையம், சின்னமனூா் என தேனி மாவட்டம் முழுவதையும் ரசித்து மகிழ்கின்றனா்.
இந்நிலையில், மகாராஜமெட்டு மலை உச்சிக்கு வனப் பாதை வழியாக நடந்து செல்பவா்களிடம் வனத் துறையினா் கடந்த 10 நாள்களாக ரூ.30 கட்டணம் வசூல் செய்வதாக, சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், மலைப் பகுதியில் குடிநீா் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யாத வனத் துறையினா் மேற்கொள்ளும் இந்த வசூல் வேட்டையை உடனே தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் எனவும், சுற்றுலாப் பணிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.