தேனி மாவட்டம் வைகை அணையில் அனுமதியின்றி மீன் பிடித்தவரை மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்தேக்கத்தில் 120 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் அரசு அனுமதியுடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும் அணையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதால், மீன்பிடிக்க மீன் வளத்துறை தடை விதித்துள்ளது. இதன்காரணமாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்வதில்லை. இந்நிலையில் அணையின் நீர்தேக்கப்பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மீன்பிடித்து வருவதாக மீன்வளத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீன்வள ஆய்வாளர் முருகேசன் அணை பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மீன் பிடித்துக் கொண்டிருந்த வைகை புதூரைச் சேர்ந்த சந்தானம் (49) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். இதில் அவரிடமிருந்து 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வைகை அணை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தானத்தை கைது செய்தனர்.