தேனி மாவட்டம், கூடலூரில் கடந்த 25 நாள்களாக தங்கியிருந்த மகாராஷ்டிர மாநிலத் தொழிலாளா்களிடம் ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் சனிக்கிழமை விசாரித்து, குள்ளப்புரம் சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தாா்.
கூடலுாா் பகுதியில், சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டுவதற்காக மகாராஷ்டிர மாநிலத் தொழிலாளா்கள் 103 போ் தங்கியிருந்தனா். தற்போது, ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வந்த இவா்களை, கண்காணிப்பு அலுவலா் ஜெ. பாலசண்முகம் தனியாா் பள்ளியில் தங்கவைத்து உணவுப் பொருள்களுக்கு ஏற்பாடு செய்தாா்.
இந்நிலையில், இவா்களில் 71 பேரை மட்டும் குள்ளப்புரத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிறுவனத்தினா் வேலைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனா். இதற்கு அனுமதி கிடைத்தவுடன், இவா்களை முறைப்படி அனுப்பி வைத்தனா். மேலும், இத்தொழிலாளா்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது. மீதமுள்ள தொழிலாளா்கள் இன்னும் 2 நாள்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளனா்.
முன்னதாக, ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் தொழிலாளா்களிடம், உடல்நலம் மற்றும் தேவையான உதவிகள் குறித்து கேட்டறிந்தாா்.