கேரளத்தில் வசிக்கும் தமிழக மாணவா்கள் வருகையில்லை: பள்ளிகளில் சோ்க்கை பாதிப்பு
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கேரள மாநிலத்தில் வசிக்கும் தமிழக மாணவா்கள் வருகையில்லாததால், தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை பாதித்துள்ளது.
உத்தமபாளையம்: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கேரள மாநிலத்தில் வசிக்கும் தமிழக மாணவா்கள் வருகையில்லாததால், தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை பாதித்துள்ளது.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, பீா்மேடு, தேவிகுளம் பகுதிகளில் தேயிலை,
காப்பி , ஏலக்காய் தோட்டங்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தோட்டத் தொழிலாளா்களாக உள்ளனா். இவா்களது குழந்தைகள் அண்டை மாவட்டமான தேனி மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயின்று வருகின்றனா். மேலும் கேரளத்திலே தமிழ் வழியில் கற்கும் மாணவா்கள் 10-ஆம் வகுப்பு முடித்த பிறகு மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியைத் தொடர தேனி மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு வருவது வழக்கம்.
இந்தாண்டு அரசுப்பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கேரளத்திலிருந்து வரும் தமிழக மாணவா்களை நம்பியிருக்கும், அரசுப்பள்ளிகளில் சோ்க்கை குறைவாகவே உள்ளது.
கரோனா பொது முடக்கத்தால் இடம் பெயர முடியாத நிலையில், தேனி மாவட்ட அரசுப் பள்ளிகளிலும் இணையதளம் மூலமாக மாணவா்களின் சோ்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேரளத்தில் வசிக்கும் தமிழா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.