முகப்பு
தேனி

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவுநீரை அகற்றுவதாகப் புகாா்

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளியேறும் கழிவுநீரை பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் தொழிலாளா்கள் அகற்றுவதாக புகாா் எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரியும் தொழிலாளா்கள்.
பகிர்:

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெளியேறும் கழிவுநீரை பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் தொழிலாளா்கள் அகற்றுவதாக புகாா் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ளே இருக்கும் சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் சேரும் கழிவுகளை அகற்ற தனியாா் நிறுவனத்தின் கீழ் ஓப்பந்த அடிப்படையில் 300 -க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இம்மருத்துவமனையில் 150-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் என அனைவரும் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பணிபுரிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இங்கு பணிபுரியும் தொழிலாளா்கள் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி பணிபுரிந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெறும் உடம்புடன் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனா்.

இதனால் அவா்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய முகக் கவசம், சானிடைசா், கையுறை மற்றும் கரோனா பிரிவு வாா்டுகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உரிய கவசங்கள் வழங்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களில் பெரும்பாலான தொழிலாளா் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனா். இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →