தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பல மணி நேரமாக குமுளியில் காத்திருந்து செல்வதால், உணவு, தண்ணீரின்றி அவதியடைந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் வழியாக கேரளத்திற்கு செல்லும் தொழிலாளர்கள் குமுளி சோதனை சாவடிக்கு செல்கின்றனர். தமிழக எல்லையான பேருந்து நிலையம் வரை வரிசையாக நிற்கின்றனர். அங்கு முதல் கட்டமாக அவர்களது இ பாஸ், ஆதார் அட்டை பரிசோதிக்கப்படுகிறது. பின்னர் கரோனாவுக்கான சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, தனியாக அமர வைக்கப்படுகின்றனர். சளிமாதிரியின் முடிவுகள் வந்ததும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த பரிசோதனைகள் முடியவே சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகிறது. ஆண், பெண், முதியோர், குழந்தைகள் வரிசையில் காத்திருந்து செல்கின்றனர். இவர்களுக்கு தமிழக எல்லையில் தேநீர், உணவு கடைகள் கிடையாது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களும் தமிழக எல்லையில் கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களை சோதனை செய்கின்றனர், தாமதம் பற்றி தமிழக அலுவலர்களிடம் கேட்ட போது, கேரள சோதனைச்சாவடியில் வருவாய், சுகாதார பணியாளர்கள் குறைவான நபர்களே பணியாற்றுகின்றனர். இதனால் தாமதம் ஏற்படுகிறது. தேனி மாவட்டம் வழியாக வருபவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தேனி மாவட்ட நிர்வாகம் தற்காலிக கூரை அமைத்து, குடிதண்ணீர் வசதி மட்டும் கூட செய்து தந்தால் போதுமானது என்றார். மேலும் தேனி மாவட்ட ஆட்சியர், இடுக்கி மாவட்ட ஆட்சியருடன் பேசி விரைவாக சோதனைகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.