ஹைவேவிஸ் மேகமலை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் செல்லத் தடை: மலைக் கிராம மக்கள் அதிருப்தி
ஹைவேஸ் மேகமலை நெடுஞ்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி இரு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதித்து இருப்பதாக வனத்துறை அறிவிப்பால் கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஹைவேஸ் மேகமலை நெடுஞ்சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறி இரு சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதித்து இருப்பதாக வனத்துறை அறிவிப்பால் கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சின்னமனூர் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி ஏழு மலை கிராமங்கள் உள்ளன. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதியில் காவல் நிலையம் பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம், தொலைபேசி நிலையம் என பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் சின்னமனூர் வனச்சரகம் சார்பில் வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி வனப்பகுதியில் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் இ-பாஸ் மூலம் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பால் மலை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மலைக்கிராமத்தில் கூறுகையில், இப்பகுதிக்கு பேருந்து வசதி முழுமையாக இல்லை. ஒரே ஒரு அரசு பேருந்து அதுவும் சரிவர இயங்குவதில்லை. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்கு இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலைச் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் செல்ல வனத்துறை விதித்த தடையால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர் என்றனர்.